மேற்கு வங்கத்தில் காணாமல் போன சிறுமி, கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
மேற்கு வங்கத்தில் கிருபாகாலி பகுதியில் வெள்ளிக்கிழமையில் (அக். 4) டியூஷன் சென்ற 11 வயது சிறுமி காணாமல் போயிருந்தார். இதனையடுத்து, சிறுமியைக் காணவில்லை என உள்ளூர் காவல் நிலையத்தில் அவரது குடும்பத்தினர் புகார் அளிக்கச் சென்றிருந்தனர். ஆனால், காவல் நிலையத்தில் தாங்கள் துன்புறுத்தப்பட்டதாகத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இன்று (அக். 5) காலையில், கால்வாயில் இறந்த நிலையில் காணாமல் போன சிறுமியை சடலமாக மீட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், சிறுமியின் பலிக்கு அவர்களும் முக்கியப் பங்காக இருந்தனர் என்று கூறி, அப்பகுதி மக்கள் ஒன்றுகூடி, காவல் நிலையத்தை சூறையாடினர்; அதில் பெரும்பாலும் பெண்களே ஈடுபட்டிருந்தனர்.
அப்பகுதி மக்கள் கைகளில் சில ஆயுதங்களோடு பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் விடியோக்களும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
அதுமட்டுமின்றி, தங்கள் மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொல்லப்பட்டிருப்பதாகவும் சிறுமியின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரத்தில் முக்கிய நபரோ அல்லது வேறு மதத்தினரோ சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பதால்தான், காவல்துறையினர் தயக்கம் காட்டுவதாகவும் சிலர் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், பாஜகவின் தகவல் தொழில்நுட்பத் துறையின் பொறுப்பாளர் அமித் மால்வியா, தனது எக்ஸ் பக்கத்தில் “மேற்கு வங்கம் துர்கா பூஜையைக் கொண்டாடும்போதுகூட, பெண்களும் சிறுமிகளும் பாதுகாப்பற்றவர்களாகவே இருக்கிறார்கள்.
மாநிலத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் அசுர சக்திகள் தோற்றால்தான், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும். மம்தா பானர்ஜி சென்றால்தான், மேற்கு வங்கத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்’’ என்று கூறியுள்ளார்.
இதையும் படிக்க:மட்டன் பிரியாணி, சிக்கன் தொக்கு: இது துர்கா பூஜைக்கான சிறப்பு மெனு!
கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அன்று தொடங்கிய மருத்துவர்களின் போராட்டங்களும், கோரிக்கைகளும் இன்று வரையில் முடிந்தபாடில்லை.
இதனைத் தொடர்ந்து, முதல்வர் மமதா பானர்ஜி பதவி விலக வேண்டும் என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், அதே மாநிலத்தில் மீண்டும் ஒரு சிறுமி, மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.