மகளிருக்கான 9-வது உலகக்கோப்பை போட்டிகள் ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபை ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகின்றன.
20 ஓவர் உலகக்கோப்பைத் தொடரின் 4-ஆவது போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் இன்று(அக். 4) பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில்160/4 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து இந்திய மகளிர் அணி 19 ஓவர்களில் 102 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. நியூசிலாந்து அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தத் தோல்வி குறித்து கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் கூறியதாவது:
இன்று எங்களது சிறந்த கிரிக்கெட்டினை விளையாடவில்லை. எந்தெந்த இடங்களில் முன்னேற வேண்டுமென கலந்தாலோசிக்க வேண்டும். இனி அனைத்து போட்டிகளும் முக்கியமானவை. நாங்கள் சிறப்பாக விளையாடியாக வேண்டும். வாய்ப்புகளை உருவாக்கினோம். ஆனால், எங்களைவிட நியூசி. சிறப்பாக விளையாடினார்கள் என்பதே உண்மை.
கேட்ச்களை விடுதல் என்பது கூடவே கூடாது. இந்த மாதிரியான பெரிய தொடர்களில் இந்தத் தவறுகளை செய்யக்கூடாது. நாங்கள் 160-170 ரன்களை பலமுறை சேஸிங் செய்திருக்கிறோம். ஆனால், இந்த ஆடுகளத்தில் இது 10-15 ரன்கள் அதிகமென நினைக்கிறேன்.
நியூசிலாந்தின் அதிரடியான தொடக்கத்தைப் பார்த்து 180 போகுமென நினைத்தேன். இந்த உலகக் கோப்பை தொடரில் இது நாங்கள் எதிர்பார்க்காத ஒரு தொடக்கமாக அமைந்திருக்கிறது என்றார்.