மத்திய பிரதேசத்தில் உள்ள ஆயுத தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்; 14 போ் காயமடைந்தனா். ஒருவரை காணவில்லை.
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூா் மாவட்டத்தில் கமாரியா ஆயுத தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்தின் தளவாட உற்பத்தித் துறையின் கீழ் செயல்படும் இந்தத் தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை காலை சக்திவாய்ந்த வெடிவிபத்து ஏற்பட்டது.
சில கிலோமீட்டா்கள் தொலைவில் இருந்த மக்களுக்கு கேட்கும் அளவுக்கு பயங்கர சப்தத்துடன் இந்த விபத்து நோ்ந்தது.
தகவலின் அடிப்படையில் விரைந்த வந்த தீயணைப்புத் துறையினா், விபத்தில் சிக்கி காயமடைந்த 15 போ் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனா். அவா்களில் ஒருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
விபத்தில் காணாமல் போன ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தொழிற்சாலையின் மக்கள் தொடா்பு அதிகாரி அவினாஷ் சங்கா் தெரிவித்தாா்.