மறைந்த ரத்தன் டாடாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் மும்பையின் வோர்லி மின்மயானத்தில் சௌராஷ்டிர – பார்சி பாரம்பரிய இறுதிச்சடங்குகளுக்குப் பின் இன்று இரவு (அக். 10) எரியூட்டப்பட்டது.
இதையும் படிக்க | மும்பை 26/11 தாக்குதல்.. 3 நாள்களாக தாஜ் ஓட்டல் வாசலிலேயே நின்றிருந்த ரத்தன் டாடா
ரத்தன் டாடாடாவின் இறுதிச்சடங்கில் பல முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமைச்சர் பியூஷ் கோயல், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பரட்னாவிஸ், காங்கிரஸ் தலைவர் சுஷில்குமார் ஷிண்டே உள்பட அரசியல் தலைவர்கள் பலரும், ஹிந்து மதத் தலைவர்கள் உள்பட சீக்கிய குருக்கள், கிறிஸ்தவ பாதிரியார்கள், முஸ்லிம் இமாம்கள் உள்ளிட்டோரும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பங்கேற்று டாடாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மும்பை காவல்துறை சார்பில் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க ரத்தன் டாடாவின் உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
ரத்தன் டாடாவின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், டாடா குழும அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் முன்னிலையில் மும்பையின் வர்லீ மின் தகன மயானத்தில் சௌராஷ்டிர – பார்சி பாரம்பரியப்படி, டாடாவின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டபின், அன்னாரது பூத உடல் எரிவூட்டப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அடுத்த 3 நாள்களுக்கு தெற்கு மும்பையில் அமைந்துள்ள டாடாவின் சொந்த வீட்டில், டாடா குடும்பப் பாரம்பரியப்படி சில சடங்குகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்தன் டாடா மறைவு
முதுமை மற்றும் அது தொடர்பான பாதிப்புகள் காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தொழிலதிபர் ரத்தன் டாடா, நேற்று (அக். 10) நள்ளிரவு காலமானார்.
மும்பை மருத்துவமனையிலிருந்து கொலபாவில் உள்ள அவரின் இல்லத்துக்கு டாடா உடல் கொண்டுச்செல்லப்பட்டது. அங்கு அவரின் குடும்பத்தினர் சடங்குகளைச் செய்தனர்.
பின்னர் அங்கிருந்து என்சிபிஏ அரங்குக்கு பலத்த பாதுகாப்புடன் எடுத்துவரப்பட்டது. ரத்தன் டாடாவின் மறைவையொட்டி மகாராஷ்டிரத்தில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது.
இதையும் படிக்க | ஜாகுவார் லேன்ட் ரோவர், டாடா-க்கு சொந்தமானது எப்படி?