ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மும்பை,
தீபிகா படுகோன் தமிழில் கோச்சடையான் படம் மூலம் அறிமுகமானார். இந்தியில் வெளியான ஓம் சாந்தி ஓம் படத்தின் மூலம் அறிமுகமான அவர் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவான சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்து பிரபலமானார்.
பாலிவுட்டில் நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் ரன்வீர் சிங் – தீபிகா படுகோன். திரையுலகில் இருவரும் இணைந்து நடித்து வந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமணம் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. திரையுலகை சேர்ந்த பலரும் இதில் கலந்துகொண்டனர்.
திருமணம் முடிந்து பல ஆண்டுகளுக்கு பிறகு தீபிகா படுகோன் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பத்தில் இருந்த தீபிகா படுகோன் அண்மையில் வெளியிட்ட போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலுக்கு சென்று இருவரும் சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று மாலை 5 மணியளவில் மும்பையின் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையில் தீபிகா அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கர்ப்பமாக இருந்த நடிகை தீபிகா படுகோனுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர்களும் திரையுலக நட்சத்திரங்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.