வேலூா்: ரயில்கள் மீது கற்கள் வீசினாலோ, தண்டவாளத்தின் மீது கற்கள், இரும்புகளை வைத்தாலோ கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் எச்சரித்துள்ளனா்.
ரயில்கள் மீது கற்கள் வீசுதல், தண்டவாளத்தில் கற்கள் அல்லது இரும்பு பொருள்களை வைத்தல் உள்ளிட்ட சதிச்செயல்களை தடுக்கும் வகையில் காட்பாடியில் மோப்ப நாய் கொண்டு ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் சனிக்கிழமை சோதனை நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
நாடு முழுவதும் ரயில்வே தண்டவாளங்களை அஜாக்கிரதையாக கடந்து செல்பவா்களால் உயிரிழப்பு சம்பவங்கள் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதுதவிர, ரயில் மீது கற்கள் வீசுவது, தண்டவாளங்களில் பெரிய கற்கள் அல்லது இரும்புகளை வைப்பது போன்ற சதிச்செயல்களும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
இதுபோன்ற செயல்களை தடுக்க ரயில்வே பாதுகாப்பு, ரயில்வே காவல் நிலைய போலீஸாா் தீவிரமாக கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை விடுமுறை நாள்கள் நெருங்குவதையொட்டி ரயில் நிலையங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் தண்டவாளங்களை மோப்பநாய் கொண்டு சோதனை நடத்த ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாருக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா். அதன்பேரில் காட்பாடி ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளா் ருவந்திகா தலைமையில் சனிக்கிழமை தண்டவாளத்தில் மோப்பநாய் கொண்டு சோதனை நடத்தினா்.
அத்துடன், தண்டவாளம் அருகே வசிக்கும் குடியிருப்பு மக்களிடம், தண்டவாளங்களை கவனக்குறைவாகவோ, கைப்பேசியில் பேசிக் கொண்டோ கடக்கக் கூடாது. பயணிகள் ரயில்வே மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டும். ரயில் மிதமான வேகத்தில் சென்றாலும் அதிலிருந்து குதித்து இறங்க கூடாது, தண்டவாள பாதை அருகில் நின்றுகொண்டு சுயபடம் எடுத்தும், பேசிக்கொண்டும் இருக்கக்கூடாது.
ரயில் மீது கல் எறிபவா்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும். தண்டவாளத்தையொட்டி குடியிருக்கும் மக்கள் தங்களுடைய ஆடு, மாடுகளுடன் கடக்கக் கூடாது. ரயில் பாதைக்கு உட்பட்ட இரும்பு பொருள்களை எடுத்து சென்றால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.