மகாராஷ்டிரத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி பங்கேற்ற நிகழ்ச்சியை சிவசேனை கட்சியின் மூத்த தலைவர் உத்தவ் தாக்கரே புறக்கணித்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவரான மறைந்த பதங்கராவ் கடத்தின் சிலை திறப்பு விழா மகாராஷ்டிர மாநிலம் சாங்கிலியில் இன்று (செப். 5) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எம்.பி., ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இந்தியா கூட்டணி கட்சியைச் சேர்ந்த, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கலந்துகொண்டார். எனினும் சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் வேட்பாளராக தனது பெயரை அறிவிக்கக்கோரியிருந்த உத்தவ் தாக்கரேவின் கோரிக்கையை காங்கிரஸ் ஏற்க மறுத்துவிட்டது. கடந்த மாதம் தில்லி சென்று ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியிலேயே முடிந்தது.
மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும், இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
உத்தவ் தாக்கரேவின் கோரிக்கையை காங்கிரஸ் ஏற்கும் வரை, அவர் காங்கிரஸின் எந்தவொரு மூத்த தலைவரையும் சந்திக்க மாட்டார் எனத் தெரிகிறது.
பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டது ஏன்? 3 காரணங்களைக் கூறும் ராகுல்
இந்நிலையில், இது குறித்துப் பேசிய சிவசேனையின் தலைமை செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ரெளத் கூறியதாவது, முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் உத்தவ் தாக்கரே வருந்தவில்லை. முன்கூட்டியே வேறு சில நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டதால், சாங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. இதில அரசியல் காரணங்கள் ஏதுமில்லை என விளக்கம் அளித்தார்.