ராஜஸ்தான் பதிவெண், ஆயுதம், கட்டுக்கட்டாக பணம்: நாமக்கல்லில் பிடிபட்ட கொள்ளையர்கள்!

நாமக்கல்: கேரள மாநிலம் திரிச்சூர் பகுதியில் மூன்று ஏடிஎம்களில் கொள்ளையடித்துவிட்டு, தப்பிச் செல்லும்போது, வடமாநிலக் கொள்ளையர்கள், தமிழகக் காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒரு கொள்ளையன் தப்பிச் செல்ல முயன்றபோது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் ராஜஸ்தான் மற்றும் ஹரியாணா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

சுட்டுக்கொல்லப்பட்ட வட மாநில கொள்ளையன், ஜமாதீன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த ஜூலையில் இதே கும்பல்தான், பெங்களூரு, ஒசூர், சித்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளையில் ஈடுபட்டது என்றும் தெரிய வந்துள்ளதாகக் காவல்துறை தகவல்.

லாரியில், பணம், ஆயுதங்கள், கார் உள்ளிட்டவை இருந்ததாக தெரியவந்துள்ளது. கேரள மாநிலம் திருச்சூரில் மூன்று வங்கி ஏடிஎம்களில் வியாழக்கிழமை இரவு பணத்தை கொள்ளையடித்த ஒரு கும்பல், கண்டெய்னர் லாரியில் கோவை, ஈரோடு மாவட்டம் வழியாக தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் வந்து கொண்டிருந்தது.

இது குறித்து தமிழகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த கண்டெய்னர் லாரி சாலையில் வந்த இரு சக்கர வாகனம், கார்களை இடித்து தள்ளியவாறு வேகமாக வந்தது. பச்சாம்பாளையம் பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தை பார்த்த வாகன ஓட்டிகள் நாமக்கல் மாவட்ட காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் திருச்செங்கோடு துணை கண்காணிப்பாளர் இமயவரம்பன் தலைமையிலான போலீஸார் விரைந்து சென்று வெப்படை பகுதியில் அந்த கண்டெய்னர் லாரியை மடக்கி பிடித்தனர். கண்டெய்னர் லாரியை காவல்துறையினர் சுற்றிவளைத்தபோது, வெப்படை – சங்ககிரி அருகே சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்திவைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

கண்டெய்னர் லாரியிலிருந்த ஏழு வடமாநில கொள்ளையர்களை கைது செய்ய முயன்றபோது ஒருவர் தப்பியோட முயற்சித்த நிலையில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இவர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்த பவாரியா அல்லது ஹரியானாவைச் சேர்ந்த மேவாட் என்ற கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இதுபோன்ற சம்பவம், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கன்னூரில் நடந்திருப்பதாகவும், இவர்கள் அண்டை மாநிலங்கள் வழியாக தப்பிச் செல்லக்கூடும் என்பதால், தமிழகத்துக்கு தகவல் அளித்தோம், அதன் அடிப்படையில், அவர்கள் பிடிபட்டிருப்பதாக கேரள காவல்துறை தெரிவித்துள்ளது.

Related posts

Pakistan: 7 Labourers From Multan Killed In Terrorist Attack In Balochistan’s Panjgur

Kerala Launches New Entrance Training Programme Benefiting Over 8 Lakh Students

AI Express-AIX Connect Merger In October First Week; ‘I5’ To Fly Into Sunset