கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசை சீர்குலைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
முடா நில முறைகேடு வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் வழங்கியதையடுத்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா மனு அளித்தார்.
இந்த வழக்கில், சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்கத் தடை இல்லை என்று உத்தரவிட்ட நீதிமன்றம், சித்தராமையாவின் மனுவை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து சித்தராமையா முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என பாஜகவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இதையும் படிக்க | ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகும் எம்.பி.க்கள்!
சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய லோக் ஆயுக்தா சிறப்பு நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து கர்நாடகத்தில் பல்வேறு இடங்களில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று மைசூருவில் செய்தியாளர்களுடன் பேசிய முதல்வர் சித்தராமையா,
நான் முதல்வர் பதவியை ஒருபோதும் ராஜிநாமா செய்ய மாட்டேன். ஹெச்.டி. குமாரசாமி ஒரு அமைச்சர், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டும் தற்போது ஜாமீனில் உள்ளார். ஏனெனில் அவர் மோடி அரசின் அமைச்சராக உள்ளார்.
இதையும் படிக்க | மைக்ரேன் தலைவலியால் பாதிக்கப்படும் பதின்வயதினர்! ஏன்? தீர்வு என்ன?
கர்நாடக காங்கிரஸ் அரசை சீர்குலைக்கச் செய்யும் பாஜகவின் அரசியல் இது. அவர்கள் கர்நாடகத்தில் தாமரையை மலர வைக்க முயற்சி செய்தார்கள்.
ஆனால், நாங்கள் 136 சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருந்ததால் அவர்கள் தோல்வியடைந்தனர். அவர்கள் பெரும்பான்மை இல்லாமல் இரண்டு முறை ஆட்சியை அமைத்தார்கள்.
முடா புகாரில் நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம்' என்றார்.