காஸா போரில், பாலஸ்தீன ஹமாஸுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹிஸ்புல்லா ஆயுதக் குழு வடக்கு இஸ்ரேல் பகுதியில் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
இந்த நிலையில், ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவுக்கு எதிராக லெபனானில் இஸ்ரேல் பாதுகாப்பு படை வான்வழித் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது.
கடந்த வாரம், லெபனானில் பரவலாக ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவைச் சேர்ந்தோர் பயன்படுத்தும் தொலைத்தொடர்பு சாதனங்களான பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள், சைபர் வழி தாக்குதல்கள் மூலம் வெடிக்கச் செய்யப்பட்டன. இந்த கோர வெடிவிபத்துகளில் ஹிஸ்புல்லா குழுவைச் சேர்ந்தோர் மட்டுமல்லாது பொதுமக்கள் உள்பட சுமார் 3,000 பேர் காயமடைந்தனர். இரு குழந்தைகள் உள்பட 37 போ் கொல்லப்பட்டனா்.
இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் நேரடியாகப் பொறுப்பேற்கவிட்டாலும், இத்தகைய உயா் தொழில்நுட்பத் தாக்குதலை இஸ்ரேல்தான் நடத்தியிருக்கும் என நம்பப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமையன்று லெபனான் தலைநகர் பீய்ரூட்டில் ஹிஸ்புல்லா குழுவைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற கட்டடம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு: போா்ப் பதற்றம் அதிகரிப்பு
இந்நிலையில், அடுத்தகட்டமாக ஹிஸ்புல்லாக்களின் ஆயுதக்கிடங்குகளை குறிவைத்து தாக்குதல்களை நடத்திட இஸ்ரேல் முனைப்பு காட்டி வருகிறது.
இதையடுத்து, தெற்கு லெபனானில் கிராமங்கள், நகரப் பகுதிகள் உள்பட மொத்தம் 19 இடங்களை ஹிஸ்புல்லா ஆயுதக்குழுக்கள் ஆயுதக் கிடங்குகளாக பயன்படுத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள வரைபடத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்கண்ட இடங்களில் தாக்குதல்களை தொடுக்க இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டுள்ளது. எனினும், அவற்றுள் எங்கெல்லாம் தாக்குதல்கள் தொடுக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. லெபனானில் இஸ்ரேல் பாதுகாப்புப் படை வான்வழித் தாக்குதல்களை மட்டுமெ மேற்கொண்டிருப்பதாகவும், தரைவழித் தாக்குதல்களை உடனடியாக நிகழ்த்தும் திட்டம் குறித்து அடுத்தகட்டமாக முடிவெடுக்கப்படும் என்று ராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, மேற்கண்ட இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறும்படி இஸ்ரேல் ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.