லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா ஏவுகணை பிரிவு தலைவர் பலி

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

பெரூட்,

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது.

அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், இன்னும் 100க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசம் பணய கைதிகளாக உள்ளனர்.

அதேவேளை, இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

குறிப்பாக, லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு அக்டோபர் 8ம் தேதி முதல் இஸ்ரேல் மீது தொடர்ந்து ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் இஸ்ரேலின் வடக்கு பகுதியில் வசித்து வந்த மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், தற்போது ஹிஸ்புல்லா தாக்குதலால் இஸ்ரேலின் வடக்கு பகுதியில் இருந்து வெளியேறிய மக்களை மீண்டும் அதே பகுதியில் குடியமர்த்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. ராணுவ நடவடிக்கை மூலமாகவும் இந்த திட்டத்தை செயல்படுத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் பயன்படுத்திவரும் பேஜர்கள் மர்மமான முறையில் ஒரேநேரத்தில் வெடித்து சிதறின. அதற்கு அடுத்தநாள் வாக்கிடாக்கிகளும் வெடித்து சிதறின. இந்த சம்பவத்தில் மொத்தம் 37 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் பின்னணியில் உள்ளதாக தகவல் வெளியானது.

இதனை தொடர்ந்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக லெபனானின் பெரூட்டில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா பயங்கரவாத குழுவின் முக்கிய தளபதி இப்ராஹிம் அகில் மற்றும் ஹிஸ்புல்லா படையின் ராட்வான் பிரிவை சேர்ந்த பயங்கரவாதிகள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 23ம் தேதி லெபனான் மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிந்தது. ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள நகரங்கள் மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல் நடத்தியது. நேற்று முன் தினம், நேற்று ஆகிய 2 நாட்கள் இஸ்ரேல் நடத்திய இந்த அதிரடி தாக்குதலில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் உள்பட 569 பேர் உயிரிழந்தனர். சுமார் 2 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் ராக்கெட் தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில், லெபனான் தலைநகர் பெரூட் மீது இஸ்ரேல் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் ஏவுகணை, ராக்கெட் பிரிவு தலைவரான இப்ராகிம் குவாப்சி கொல்லபட்டார். ஹிஸ்புல்லா ஏவுகணை, ராக்கெட் பிரிவு தலைவரான இப்ராகிம் இஸ்ரேல் மீதான பல்வேறு ஏவுகணை தாக்குதல்களுக்கு தலைமை ஏற்றுள்ளார். தற்போது இப்ராகிம் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

பெரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இப்ராகிம் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயமடைந்தனர். அதேவேளை, தாக்குதலை தீவிரப்படுத்த உள்ளதால் தெற்கு மற்றும் கிழக்கு லெபனானில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் தலைமையகத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.

அதேவேளை, இஸ்ரேலின் ஹொலன் ஹைட்ஸ் பகுதியை குறிவைத்து ஈரானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பு இன்று டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர், லெபனானில் செயல்பட்டுவரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள், ஏமனில் செயல்பட்டுவரும் கிளர்ச்சியாளர்கள், ஈராக்கில் செயல்பட்டுவரும் பயங்கரவாத அமைப்பு என நான்கு தரப்பில் இருந்தும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால், மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024