லெபனான் மீது இஸ்ரேல் நடத்திவரும் தொடர் தாக்குதலின் விளைவாக கடந்த 5 நாள்களில் மட்டும் 90 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்து சென்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாக்களும், லெபனான் மீது இஸ்ரேலும் தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த வாரம் லெபனானில் பரவலாக ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவைச் சேர்ந்தோர் பயன்படுத்தும் தொலைத்தொடர்பு சாதனங்களான பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள், சைபர் வழி தாக்குதல்கள் மூலம் வெடிக்கச் செய்யப்பட்டன.
இந்த கோர வெடிவிபத்துகளில் ஹிஸ்புல்லா குழுவைச் சேர்ந்தோர் மட்டுமல்லாது பொதுமக்கள் உள்பட சுமார் 3,000 பேர் காயமடைந்தனர். இரு குழந்தைகள் உள்பட 37 போ் கொல்லப்பட்டனா்.
இந்நிலையில் கடந்த இரு நாள்களாக ஹிஸ்புல்லா குழுக்களை அழிக்கும் நோக்கத்தில் லெபனான் மீது தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது இஸ்ரேல். இதில், 558 பேர் கொல்லப்பட்டனர். 1,600 பேர் படுகாயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து தெற்கு லெபனானில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பெய்ரூட் வழியாக இடம்பெயர்ந்தனர். இதுவரை 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்து சென்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் அவையின் புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன.