Friday, September 20, 2024

வங்காளதேசம்: இடைக்கால அரசின் முதன்மை ஆலோசகராக முகமது யூனுஸ் பதவியேற்றார்

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

2006-ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரான, 84 வயதுடைய யூனுஸ், இன்றிரவு முறைப்படி பதவியேற்று கொண்டார்.

டாக்கா,

வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் ஏறக்குறைய 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதன் தொடர்ச்சியாக, பதவியை ராஜினாமா செய்து விட்டு, டாக்காவில் இருந்து சகோதரியுடன் ஹசீனா வெளியேறினார். அவர் இந்தியாவில் தஞ்சமடைந்து உள்ளார்.

ஹசீனா ராஜினாமா செய்த நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இதற்கான உத்தரவை அதிபர் முகமது சஹாபுதீன் பிறப்பித்துள்ளார். இதனையடுத்து, இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டார்.

ஒலிம்பிக் போட்டிகளுக்காக பாரீஸ் சென்றுள்ள முகமது யூனுஸ் இடைக்கால அரசின் தலைமை பொறுப்பை ஏற்பதற்காக இன்று மதியம் நாடு திரும்பினார். யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இன்று பதவியேற்கும் என வங்காளதேச ராணுவ தளபதி வேக்கர்-உஸ்-ஜமான் கூறினார்.

இடைக்கால அரசின் தலைவரான பேராசிரியர் முகமது யூனுசுக்கு ஆயுதப்படைகள் அனைத்து ஆதரவையும் வழங்கும் என்றும் கூறியுள்ளார். இதனிடையே, எல்லா வகையான வன்முறைகளில் இருந்து விலகி இருக்கவும், அமைதியை கடைப்பிடிக்கவும் போராட்டக்காரர்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் முகமது யூனுஸ் அழைப்பு விடுத்து பேசினார்.

யூனுஸ் பதவியேற்பு விழாவில் டாக்காவில் உள்ள இந்திய தூதர் கலந்து கொள்ள கூடும் என கூறப்பட்டது. இடைக்கால அரசில் அந்நாட்டின் மாணவர் தலைவர்களான நஹித் இஸ்லாம் மற்றும் ஆசிப் மஹ்மூத் ஆகியோரும் இணைய கூடும் என கூறப்படுகிறது.

2006-ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரான, 84 வயதுடைய யூனுஸ், இன்றிரவு முறைப்படி பதவியேற்று கொண்டார். இதற்காக அதிபர் இல்லம் அமைந்துள்ள பங்கபாபான் பகுதிக்கு அதிபர் சகாபுதீன் மற்றும் யூனுஸ் உள்ளிட்டோர் வந்தடைந்தனர்.

வங்காளதேச தேசிய கீதம் இசைத்த பின்னர், பதவியேற்பு விழா தொடங்கியது. அதிபர் சகாபுதீன் பதவியேற்பு பற்றிய ஆவணங்களை அறிக்கையாக வாசித்து காட்டினார். இடைக்கால அரசின் முதன்மை ஆலோசகராக பேராசிரியர் முகமது யூனுஸ் முறைப்படி பதவியேற்று கொண்டார்.

You may also like

© RajTamil Network – 2024