Friday, September 20, 2024

வடகொரிய வெள்ளத்தில் 1,000 பேர் பலி.. கடமை தவறிய 30 அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டனையா?

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

File image

சியோல்,

வடகொரியாவில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 4,100 வீடுகள், 7,410 விவசாய நிலங்கள், அரசு கட்டடங்கள், சாலைகள் மற்றும் ரெயில்வே லைன்கள் என அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. இந்த பாதிப்புகளில் சிக்கி 1000 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. வடகொரியாவின் வடமேற்கு பகுதிகளில் உள்ள நகரங்களின் அதிக பாதிப்புகள் நிகழ்ந்துள்ளன. வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட அதிபர் கிம் ஜாங் உன் அவ்விடங்களை மீண்டும் கட்டியெழுப்ப பல மாதங்கள் ஆகும் என்று தெரிவித்தார். மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட 15,400 பேருக்கு தலைநகர் பியோங்யாங்கில் அரசாங்கம் தற்காலிக தங்குமிடம் வழங்கியுள்ளது.

இந்த வெள்ள பாதிப்புகளைத் தடுக்கத் தவறிய அதிகாரிகளைக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிபர் கிம் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், அதிபரின் உத்தரவுப்படி கடந்த மாத இறுதியில் ஊழல் மற்றும் கடமை தவறிய அரசு அதிகாரிகளாக 30 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக தென்கொரியாவின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் நிலையில், வடகொரியா தரப்பில் எதுவும் கூறப்படவில்லை. முன்னதாக வட கொரியா வெள்ளத்தில் அதிக மக்கள் உயிரிழந்துள்ளதை மறுத்த அதிபர் கிம் ஜாங் உன் இவை வட கொரியாவின் சர்வதேச பிம்பத்தைச் சிதைக்கத் தென் கொரியா பரப்பும் வதந்திகள் என்று மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024