இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி ஃபிடே லைவ் ரேட்டிங்கில் 2,800 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
இந்த சாதனையை நிகழ்த்தும் 2ஆவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்பு தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்த் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுவரை உலக அளவில் 15 பேர் மட்டுமே இந்தப் புள்ளிகளை கடந்திருந்தார்கள். தற்போது, 16ஆவது வீரராக அர்ஜுன் எரிகைசி இணைந்துள்ளார். இதற்கு தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
செஸ் தரவரிசையில் 3ஆவது இடம்
இதன்மூலம் உலக செஸ் தரவரிசையில் 3ஆவது இடத்துக்கும் முன்னேறியுள்ளார். முதலிடத்தில் மாக்னஸ் கார்ல்சன் 2,831 புள்ளிகளுடன் இருக்கிறார். 2ஆம் இடத்தில் ஃபபியானோ கருணா 2,805.2 புள்ளிகளுடன் இருக்கிறார்.
கடந்த வாரம் நடைபெற்ற டபிள்யூஆர் செஸ் மாஸ்டர்ஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் அர்ஜுன் எரிகைசி வெற்றி பெற்றாலும் இந்த சாதனையை நிகழ்த்த முடியவில்லை. கிளாசிக்கல் கேமில் டிரா ஆனதால் தவறவிட்டார்.
45ஆவது செஸ் ஒலிம்பியாட்டில் அர்ஜுன் எரிகைசி முதல் 6 போட்டிகளில் 6-0 என வென்றதால் இந்தியா முதலிடத்தை தக்க வைக்க மிகவும் உதவியது குறிப்பிடத்தக்கது.
செஸ் உலகில் பலரும் அர்ஜுனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.