குஜராத்தில் நிறுவப்பட்ட சர்தார் வல்லபபாய் படேல் சிலையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அது எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்றும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த அடையாளம் தெரியாத நபர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தின் நர்மதை மாவட்டத்தின் கெவாதியா பகுதி ஆற்றங்கரை ஓரத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு சர்தார் வல்லபபாய் படேல் நினைவாக 182 உயர சிலை நிறுவப்பட்டது. இந்திய நாட்டின் முதல் உள்துறை அமைச்சராக இருந்த படேலை கௌரவிக்கும் விதமாக 'ஒற்றுமைக்கான சிலை’ எனப் பெயரிடப்பட்ட இந்த சிலை அந்தப் பகுதியின் முக்கிய சுற்றுலாத் தளமாக விளங்குகிறது.
வந்தே பாரத்தை சுத்தியலால் உடைத்த இளைஞர்! எங்கே?
இந்நிலையில், இந்த சிலையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், எந்த நேரத்திலும் சிலை கீழே விழலாம் என்றும் ’ராகா4இந்தியா’ என்ற எக்ஸ் தள பயனர் ஹிந்தியில் கடந்த செப். 8 அன்று பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில் சிலைக் கட்டுமானத்தின்போது எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தப் பதிவு வைரலாகி பல்வேறு விமர்சனங்களைப் பெற்றதால் பதிவர் தனது பக்கத்தில் அதனை நீக்கிவிட்டார்.
ஒற்றுமைக்கான சிலையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள கணக்கிலும் இது பொய்ச்செய்தி என்று பதிவிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, ஒற்றுமைக்கான சிலை பகுதியின் வளர்ச்சி மற்றும் சுற்றுலாத் துறை ஆணையத்தின் துணை ஆட்சியர் அபிஷேக் ரஞ்சன் சின்ஹா அளித்த புகாரின் பேரில் பொய்ச்செய்தி பரப்பியதாகக் கூறி எக்ஸ் தளத்தில் பதிவிட்டவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 352 (1) -ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பொய்ச்செய்தி பரப்பி மக்களிடையே அச்சத்தைத் ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயல்கின்றனர்’ என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.