இந்திய விமானப் படை துணைத் தளபதியாக ஏர் மார்ஷல் எஸ்.பி. தார்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
விமானப்படையின் அடுத்த தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஏர் மார்ஷல் ஏ.பி. சிங்கைத் தொடர்ந்து, எஸ்.பி. தார்கர் பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் விமானியான எஸ்.பி. தார்கர், 3600 மணிநேரம் விமானத்தில் பறந்த அனுபவம் வாய்ந்தவர். டேஹ்ராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்திய ராணுவக் கல்லூரி முன்னாள் மாணவராவார். மேலும் புணேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாதெமியிலும் பயின்றுள்ளார்.
வெல்லிங்டன் பாதுகாப்பு சேவைக் கல்லூரி, அமெரிக்க ஏர் வார் கல்லூரியிலும் பயின்ற அனுபவம் கொண்டவர். ஜூன் 1985 இல் விமானப் படையில் பணியமர்த்தப்பட்ட எஸ்.பி. தார்கர், விமானப் படை பயிற்றுவிப்பாளர். இவர் விமானப்படை தேர்வாளராகவும் இருந்துள்ளார்.
பாதுகாப்பு சேவை கல்லூரி மற்றும் செகந்தராபாத்திலுள்ள விமானப் படை கல்லூரியில் இடைநிலை மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு பயிற்றுவிப்பாளராகவும் இருந்துள்ளார்.
இந்திய விமானப்படை தளபதியாக உள்ள விவேக் ராம் செளத்ரி செப். 30ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளார். இதனையொட்டி, விமானப் படையின் தற்போதைய துணைத் தளபதியாக உள்ள ஏர் மார்ஷல் அமர் பிரீத்சிங், அடுத்த தளபதியாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தார்.