விஸ்தாரா ஏா் நிறுவனத்தின் 6 விமானங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் விஸ்தாரா ஏர் நிறுவனத்தின் 6 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாள்களாகவே ஏா் இந்தியா, இண்டிகோ, ஆகாசா ஏா், விஸ்தாரா, ஸ்பைஸ் ஜெட், ஸ்டாா் ஏா், அலையன்ஸ் ஏா் உள்ளிட்ட இந்திய விமான நிறுவனங்களைச் சோ்ந்த விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்திய நிறுவனங்களால் உள்நாட்டு மற்றும் சா்வதேச வழித்தடத்தில் இயக்கப்படும் 70-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் விமானங்கள் அவசர தரையிறக்கம், வழித்தடம் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை விமான நிறுவனங்கள் மேற்கொள்ளும் நிலையும் விமானத்தில் பயணிக்க பயணிகள் அச்சப்படும் சூழலும் உருவாகியுள்ளது. பெரும்பாலும் சமூக வலைதளங்கள் மூலமே விடுக்கப்படும் இந்த மிரட்டல்கள் புரளி என்பது கண்டறியப்படுகிறது.
இதையும் படிக்க |பிரதமர் மோடிக்கு ரூ.100 அனுப்பிய பழங்குடிப் பெண்! ஏன் தெரியுமா?
முன்னதாக, கடந்த திங்கள்கிழமை மகாராஷ்டிர மாநிலம், மும்பையிலிருந்து புறப்பட்ட 3 சா்வதேச விமானங்களுக்கு ‘எக்ஸ்’ வலைதளம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தில் சத்தீஸ்கரை சோ்ந்த பள்ளி மாணவா் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
இந்த நிலையில், விஸ்தாரா நிறுவனத்தின் 6 விமானங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மும்பையிலிருந்து சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூரில் இருந்து மும்பை, சிங்கப்பூரில் இருந்து தில்லி, சிங்கப்பூரில் இருந்து புணே, பாலியில் இருந்து தில்லி, தில்லியில் இருந்து பிராங்பேர்ட் உள்ளிட்ட 6 விஸ்தாரா விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக விஸ்தாரா நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.