துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று இந்திய மகளிரணி நியூசிலாந்து மகளிரணியை எதிர்கொள்கிறது. இந்தியாவின் தொடக்க வீராங்கனைகளாக ஷஃபாலி வர்மா (20), ஸ்மிருதி மந்தனா (28) களமிறங்குவார்கள்.
இருவரும் இணைந்து 73 சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் 2,483 ரன்கள் எடுத்துள்ளார்கள். இதில் 3 சதங்கள், 16 அரைசதங்கள் அடங்கும்.
இவர்களது பார்ட்னர்ஷிப் இந்தியாவின் வெற்றிக்கு மிகவும் முக்கியமானது. 2019 இருந்து ஸ்மிருதியுடன் நட்பு இருப்பதாக ஷஃபாலி வர்மா தெரிவித்துள்ளார்.
ஷஃபாலி வர்மா பேசியதாவது:
ஸ்மிருதியுடன் கடந்த 2-3 வருடங்களாக விளையாடி வருகிறேன். நாங்கள் இருவரும் எங்களது உணர்வுகளை முகத்தின் வெளிப்பாடுகளை வைத்தே புரிந்துகொள்வோம்.
ஸ்மிருதி அக்காவிடம் பிடித்த 2 பண்புகள்
எங்களது பலம், பலவீனம் என்னவென்று எங்களுக்குத் தெரியும். நாங்கள் இருவரும் அணிக்கு எவ்வளவு முக்கியமென்பது தெரியும். குறிப்பாக பவர்பிளேவில் சிறப்பாக செயல்படுவது நமது அணிக்கும் நாட்டுக்கும் எவ்வளவு முக்கியமென்பது தெரியும்.
ஸ்மிருதி அக்கா பந்தினை சரியான நேரத்தில் அற்புதமாக சந்திப்பார். அவரது டைமிங் அற்புதமாக இருக்கும். ஒரு இன்னிங்ஸை எப்படி விளையாட வேண்டுமெனவும் அவருக்குத் தெரியும். இந்த இரண்டு பண்புகள் அவரிடம் பேட்டிங்கில் மிகவும் பிடிக்கும்.
நியூசி. உடன் வெல்ல என்ன செய்ய வேண்டும்?
முதல் போட்டி நியூசி.யுடன். நீண்ட நாள்களுக்குப் பிறகு அவர்களுடன் விளையாடுகிறோம். 6-7 மாதங்களாக பயிற்சி எடுத்து உள்ளோம். சோபியா டிவைன் பயமறியா பேட்டர். அவரை விரைவில் ஆட்டமிழக்க வேண்டும் என்றார்.
நியூசிலாந்திடம் 13 போட்டிகளில் 9 முறை தோல்வியுற்றிருக்கிறது. உலகக் கோப்பையில் 2-2 சமநிலையில் இருக்கிறது.
ஆஸ்திரேலியாவின் அலீஸா ஹுலி, பெத் மூனி அவர்களின் 81 போட்டிகளில் 2,635 ரன்கள் எடுத்துள்ளார்கள். இந்த ஜோடிக்குப் பிறகு ஸ்மிருதியும் ஷஃபாலியும்தான் இருக்கிறார்கள்.