ஹரியாணா முதல்வராக நாளை பதவியேற்கிறார் நயாப் சைனி!

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

ஹரியாணாவில் ஆட்சி அமைக்க ஆளுநரை நேரில் சந்தித்து பாஜக பேரவைக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நயாப் சிங் சைனி புதன்கிழமை உரிமை கோரினார்.

முன்னதாக, சண்டீகரில் நடைபெற்ற பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டத்தில், பாஜக குழுத் தலைவராக நாயப் சிங் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மீண்டும் நயாப் சிங்

ஹரியாணா முதல்வராக இருந்த மனோகர் லால் கட்கர் பதவி விலகியதை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் நயாப் சிங் சைனி முதல்வராக பதவியேற்றார்.

இதனைத் தொடர்ந்து, இந்த மாதம் ஹரியாணாவில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 48 இடங்களில் வென்று தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது.

இந்த நிலையில், ஹரியாணா சட்டப்பேரவையின் பாஜக தலைவரை தேர்வு செய்யும் கூட்டம், சண்டீகரில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில், நயாப் சிங் சைனி ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அமித் ஷாவுடன் சண்டீகரில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற நயாப் சிங், பாஜக எம்.எல்.ஏ.க்களின் கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இதையும் படிக்க : ஜம்மு – காஷ்மீர் முதல்வராக பதவியேற்றார் ஒமர் அப்துல்லா!

நாளை பதவியேற்பு

பஞ்ச்குலாவில் உள்ள தசரா மைதானத்தில் நாளை(அக்.17) காலை 10 மணிக்கு நயாப் சிங் சைனி பதவியேற்கவுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.

இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024