ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா நேற்று (செப். 28) கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பெய்ரூட்டில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அந்த அமைப்பின் மற்றொரு முக்கியத் தலைவரான நபில் காவுக் இன்று கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பை தோற்றுவித்தவா்களில் ஒருவரும், அந்த அமைப்பின் தலைவருமான ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தாா்.
இதனைத் தொடர்ந்து, அந்த அமைப்பின் மற்றொரு மூத்த தலைவரான நபில் காவுக் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் எக்ஸ் தளப் பக்கத்தில் இஸ்ரேலின் போர் விமானங்களின் தொடர் வான்வழித் தாக்குதல்களால் நபில் காவுக் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியாகியுள்ளது.
ஹிஸ்புல்லாக்களின் புதிய தலைவர் ஹஷீம் ஷஃபிதீன்!
யார் இந்த நபில் காவுக்?
ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கியத் தளபதியாக இருந்த நபில் காவுக், அந்த அமைப்பின் தடுப்புப் பாதுகாப்புப் பிரிவின் தலைவராகச் செயல்பட்டார். மேலும், அதன் மத்திய கவுன்சிலில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
1980 முதல் ஹிஸ்புல்லாவின் முக்கிய உறுப்பினராக இருந்து வரும் இவர், தெற்கு லெபனான் பகுதியில் ஹிஸ்புல்லாவின் ராணுவத் தளபதியாகவும் பணியாற்றினார். அமெரிக்கா கடந்த 2020 இல் இவர் மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்தது.
இவர் கொல்லப்பட்டது தொடர்பாக ஹிஸ்புல்லா அமைப்பிடம் இருந்து தற்போது வரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
ஹிஸ்புல்லா தலைவா் படுகொலை: வெற்றிப் பாதையில் இஸ்ரேல்?
இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களால் சமீபத்தில் ஹிஸ்புல்லாவின் பல முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அண்மையில் லெபனானில் பேஜா் கருவிகள் திடீரென வெடித்துச் சிதறின. இந்த சம்பவம் நடைபெற்ற மறுநாள், அந்நாட்டில் வாக்கி டாக்கிகள், சூரிய ஒளி மின்சார கருவிகள் வெடித்துச் சிதறின. இந்தத் தாக்குதல்களில் ஹிஸ்புல்லா கிளா்ச்சியாளா்கள் உள்பட 39 போ் உயிரிழந்தனா். சுமாா் 3,000 போ் காயமடைந்தனா்.
தொழில்நுட்ப வழியில் மேற்கொள்ளப்பட்ட இந்த நூதன தாக்குதல்களை இஸ்ரேல்தான் நடத்தியது என்று லெபனான் தெரிவித்த குற்றச்சாட்டை இஸ்ரேல் மறுக்கவில்லை.
ஹிஸ்புல்லா அமைப்பும் நூற்றுக்கணக்கான ராக்கெட் மற்றும் ஏவுகனைகளை இஸ்ரேல் மீது தொடர்ந்து ஏவி வருகிறது. ஆனால், அவற்றில் பல இஸ்ரேலால் தடுக்கப்பட்டும், திறந்தவெளிகளிலும் விழுந்துள்ளன.