லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா உளவுத் துறை தலைமையகத்தின்மீது இஸ்ரேல் ராணுவம் இன்று (அக். 20) தாக்குதல் நடத்தியது.
இதில், ஹிஸ்புல்லா குழுவைச் சேர்ந்த தலைமைத் தரவரிசைப் பட்டியலில் இருந்த 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், சுரங்கத்தில் செயல்பட்டுவந்த ஆயுத பழுதுநீக்கும் தளத்தையும் முற்றிலும் அழித்துள்ளது.
லெபனானின் தெற்கு பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா உளவுத் துறை தலைமையத்தைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் இன்று தாக்குதல் நடத்தியது. இதில், ஹிஸ்புல்லாவில் முக்கிய அதிகாரிகளான எல்ஹாக் அப்பாஸ் சலாமேஹ், ராச்சா அப்பாஸ் இச்சா மற்றும் அஹமது அலி ஹசின் ஆகிய மூன்று பேர் பலியானதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த இலக்கில் பெய்ரூட் சுரங்கத்தில் செயல்பட்டுவந்த ஆயுதங்கள் பழுதுநீக்கும் தளமும் அழிக்கப்பட்டுள்ளது என இஸ்ரேல் ராணுவம் குறிப்பிட்டது.
இதையும் படிக்க | சொல்லப் போனால்… மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!
378 நாள்கள் இடைவிடா தாக்குதல்
லெபனான் மீதான தாக்குதல் குறித்து எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள இஸ்ரேல் ராணுவம், தெற்கு இஸ்ரேலில் கடந்த வாரம் முழுக்க சைரன் ஒலி அலரிக்கொண்டே இருந்தது. கடந்த 378 நாள்களாக ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினர் இஸ்ரேல் குடிமக்களை நோக்கி தாக்குதல் நடத்தி வருகின்றனர். எங்கள் குடிமக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாங்கள் களத்தில் செயல்பட்டு வருகிறோம் எனக் குறிப்பிட்டுள்ளது.
சமீபத்தில் தெற்கு காஸாவில் உள்ள பெயிட் லாஹியா (Beit Lahiya) பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 73 பேர் பலியானதாகவும், இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதாகவும் காஸா அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சுவதாகவும் காஸா சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிக்க | நெதன்யாகு எச்சரிக்கை… அடுத்த தாக்குதலுக்குத் தயாராகும் இஸ்ரேல்!
தெற்கு காஸாவின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், இஸ்ரேல் ராணுவத்தினர் தொடர்ந்து 16 நாள்களாக இடைவிடாது நடத்திய தாக்குதலில் மக்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் காஸா குறிப்பிட்டுள்ளது.
இதனை இஸ்ரேல் ராணுவம் கடுமையாக மறுத்துள்ளது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்டப்படுவதாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரின் மனைவியைக் கொல்லும் நோக்கத்தில் அவரின் வீட்டின் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு நெதன்யாகு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.