ஹைதராபாத்தில் நம்பள்ளி கண்காட்சி மைதானத்தில் உள்ள துர்கா தேவி சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், தேவி சரண் நவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நம்பள்ளி கண்காட்சி மைதானத்தில் துர்கா தேவி சிலை நிறுவப்பட்டிருந்தது. இந்த சிலையை வியாழக்கிழமை இரவு மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். தகவல் கிடைத்ததும் பேகம் பஜார் காவல் நிலையத்தில் இருந்து தனிப்படை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அசாம் சிறையில் 5 விசாரணைக் கைதிகள் தப்பியோட்டம்!
சிலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த காவலர் கழிவறைக்குச் சென்றபோது, மர்மநபர்கள் இந்த வேலையை செய்துள்ளனர். சிலையை சேதப்படுத்துவதற்கு முன்பு மர்ம நபர்கள் மின் இணைப்பை துண்டித்து, சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
இந்தச் செயல் குற்றவாளிகளால் நன்கு திட்டமிட்டு செய்யப்பட்டதாக அமைப்பாளர்கள் சந்தேகிக்கின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக கோயிலில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக உள்ளூர் பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போதெல்லாம், குடிகாரர்கள் அல்லது மனநலம் குன்றியவர்கள் மீது போலீஸார் குற்றம் சாட்டுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நகரின் மையப்பகுதியில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவியது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.