கடந்த 10 மாதங்களில் 194 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா இன்று (அக். 7) தெரிவித்தார்.
மேலும், 801 நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 742 பேர் சரணடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உள் துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நக்சல் பாதிப்பு அதிகமுள்ள மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டம் தில்லியில் இன்று (அக். 7) நடைபெற்றது. இதில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நக்சல்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளின் மேம்பாடு குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதில் பேசிய அமைச்சர் அமித் ஷா, சத்தீஸ்கர் மாநில முதல்வர், உள் துறை அமைச்சர், காவல் துறை தலைமை இயக்குநர் என மாநிலத்தின் அனைத்து உயரதிகாரிகளுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த ஜனவரி மாதத்திலிருந்து 194 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர். 801 நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 742 பேர் சரணடைந்துள்ளனர்.
இதையும் படிக்க | காங்கிரஸ் கொள்கைகளை மக்கள் ஏற்பார்கள்: ப.சிதம்பரம்
நக்சல் அமைப்புடன் தொடர்பிலுள்ள இளைஞர்கள் ஆயுதங்களைக் கைவிட்டு பொதுவாழ்க்கையில் இணைய வேண்டும். வடகிழக்கு மற்றும் ஜம்மு – காஷ்மீரில் 13 ஆயிரம் பேர் ஆயுதங்களைக் கைவிட்டு நக்சல் அமைப்பிலிருந்து வெளியேறியுள்ளனர்.
நக்சல்களுக்கு எதிரான பாதுகாப்பு தொடர்பான திட்டங்களுக்காக 2004 – 2014 வரை ரூ.1,180 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2014 – 2024 வரை ரூ.3006 கோடி செலவிடப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டுக்கு முன்பு வீரர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஹெலிகாப்டர்கள் எண்ணிக்கை 2ஆக இருந்தது. ஆனால் தற்போது 12ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் 6 ஹெலிகாப்டர்கள் எல்லைப் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படுகிறது எனக் குறிப்பிட்டார்.