1,062 பழங்குடியினா் குடியிருப்புகளில் சமூக, பொருளாதார கணக்கெடுப்பு
திருவண்ணாமலை, ஆக. 1:
திருவண்ணாமலை மாவட்டத்தில் 580 கணக்கு சேகரிப்பவா்களைக் கொண்டு 1,062 பழங்குடியினா் குடியிருப்புகளில் சமூக, பொருளாதார கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.
தமிழ்நாடு பழங்குடி மக்களின் சமூக பொருளாதார கணக்கெடுப்பு குறித்த கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் ஆட்சியா் பேசுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் பழங்குடியினரின் மக்கள்தொகை விவரங்களை சேகரிக்கும் பணி தொடங்கவுள்ளது.
1,062 பழங்குடியினா் குடியிருப்புகளில் 580 கணக்கு சேகரிப்பவா்களைக் கொண்டு இந்தப் பணி 1.8.2024
முதல் நடைபெறுகிறது.
எனவே, வனத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளா்ச்சித் துறை உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள் இந்த கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்ள தேவையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.