Sunday, September 22, 2024

129 காவல்துறை, சீருடை அலுவலர்களுக்கு அண்ணா பதக்கங்கள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு,129 தமிழக காவல்துறை மற்றும் சீருடைஅலுவலர்கள், பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்களை அறிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழ் நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை, ஊர்க்காவல் படை மற்றும் விரல்ரேகைப் பிரிவு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ஆம் நாள் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று தமிழக முதல்வரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு, காவல் துறையில் தலைமைக்காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 100 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் தீயணைப்பு வீரர் முதல் துணை இயக்குநர் வரையிலான 10 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையில் முதல்நிலை சிறைக்காவலர் முதல் உதவி சிறை அலுவலர் வரையிலான 10 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், ஊர்க்காவல்படையில் ஊர்க்காவல் படைவீரர் முதல் படைத்தளபதி வரையிலான 5 ஊர்க்காவல் படை அலுவலர்களுக்கும் மற்றும் விரல்ரேகைப் பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கும், அவர்களின் மெச்சத்தகுந்த பணியினை அங்கீகரிக்கும் வகையில் “தமிழக முதல்வரின் அண்ணா பதக்கங்கள்” வழங்கிட முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

ஓணம் பண்டிகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

மேலும், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையத்தில் பணிபரிந்து வரும் எஸ்.மந்திரமூர்த்தி, முன்னணி தீ அணைப்போர் 7807 மற்றும் ராமச்சந்திரன், தீ அணைப்போர். 8229 ஆகிய இருவரும் கடந்த 2023 டிசம்பர் 18-ஆம் தேதி இரவு தாமிரவருணி ஆற்றின் கரையில் வெள்ளம் புகுந்த கிராமங்களில் இருந்து மிகவும் ஆபத்தான சூழ்நிலையிலும், மற்றும் மீட்பு பணி சவாலாக இருந்த நிலையிலும், படகுகள் மூலம் சுமார் 448 பேரை மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர். அவர்களின் துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பு செயலை பாராட்டி இருவருக்கும் “தமிழக முதல்வரின் தீயணைப்பு பணிக்கான அண்ணா வீரதீர பதக்கம்” வழங்கிட முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

மேற்கண்ட பதக்கங்கள் முதல்வரால் மற்றொரு விழாவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024