வீட்டுக்கு வீடு வாசப்படி தொடரில் நடித்துவந்த நடிகர் அவினாஷ் தனது நீண்ட நாள் காதலியைத் திருமணம் செய்துகொண்டார். அவர்கள் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது.
அவினாஷின் திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது பலரால் பகிரப்பட்டு வருகிறது. சின்னத்திரை பிரபலங்களும் ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு வீட்டுக்கு வீடு வாசப்படி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் திரவியம் ராஜ்குமார் நாயகனாக நடிக்கிறார். ஈரமான ரோஜாவே தொடரைத் தொடர்ந்து, இத்தொடரில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீதா சிவதாஸ் நடித்து வருகிறார்.
வீட்டுக்கு வீடு வாசப்படி தொடரில் கண்ணன் என்ற முக்கியமான பாத்திரத்தில் நடிகர் அவினாஷ் நடித்து வருகிறார்.
இவர் பாக்கியலட்சுமி தொடரில் அமிர்தா பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை அக்ஷிதாவின் அண்ணன் தான். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரிலும் கயலின் தம்பியாக அவினாஷ் நடித்திருந்தார். பின்னர் அத்தொடரில் இருந்து விலகிவிட்டார்.
துபையைச் சேர்ந்த இவர், தமிழில் பல்வேறு சின்னத் திரை தொடர்களில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அழகு என்ற தொடரின் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் பங்கேற்று இறுதிப்போட்டியாளராக வெற்றி பெற்றார்.
இந்நிலையில் இவர் தனது 13 ஆண்டு கால காதலியை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார். தெரசா மரிய ஜோசப் என்பவருடனான காதல் வாழ்க்கையை திருமண வாழ்க்கையாக மாற்றியுள்ளார்.
கிறிஸ்தவ முறைப்படி எளிமையாக நடைபெற்ற திருமணத்தில் நண்பர்கள், உறவினர்கள் கலந்துகொண்டனர். திருமணத்தின் புகைப்படங்களை நடிகர் அவினாஷ் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நடிகர் அவினாஷ், ''3 ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகு, இறுதியாக எங்கள் திருமணத்தை நடத்தி முடித்துள்ளோம். 13 ஆண்டுகால நட்பும் காதலும் அதிகாரப்பூர்வமாக இணைந்தது. கனவு நனவான தருணம் இது'' என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
புதுமண தம்பதிக்கு சின்னத்திரை நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.