Saturday, September 21, 2024

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரர்

by rajtamil
0 comment 28 views
A+A-
Reset

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரர், போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

மயிலாடுதுறை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் திருநாவுக்கரசு(வயது 34). இவர், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.

மனைவி, குழந்தைகள் சொந்த ஊரில் வசித்து வரும் நிலையில் திருநாவுக்கரசு பெரம்பூரில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவருக்கும், போலீஸ் குடியிருப்புக்கு அருகே வசிக்கும் ஒருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் மொபைல் போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர்.

இந்த நிலையில் திருநாவுக்கரசுக்கும், நண்பரின் மகளான சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 8-ந் தேதி நண்பரின் மகளான 16 வயது சிறுமியை போலீஸ் குடியிருப்புக்கு வரவழைத்த திருநாவுக்கரசு அவரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட உதவி மையத்துக்கு வந்த புகாரின் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூகப் பணியாளர் ஆரோக்கியராஜ், பெண் உதவியாளருடன் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார். தொடர்ந்து விசாரணையின் அடிப்படையில் ஆரோக்கியராஜ், பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருநாவுக்கரசை கைது செய்து நாகை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

முன்னதாக இந்த சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா, பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான போலீஸ்காரர் திருநாவுக்கரசை பணியிடை நீக்கம் செய்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

© RajTamil Network – 2024