Monday, October 7, 2024

2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் | கடினமான பகுதிகளை துளையிடும் ‘ஃபிளமிங்கோ’ – அதிகாரிகள் தகவல்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் | கடினமான பகுதிகளை துளையிடும் ‘ஃபிளமிங்கோ’ – அதிகாரிகள் தகவல்

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 4-வது வழித்தடத்தில் கலங்கரை விளக்கத்தில் இருந்து கச்சேரி சாலையை நோக்கி மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சுரங்கம் தோண்டும் இயந்திரமான `ஃபிளமிங்கோ’, பூமிக்கடியில் கடினமான பகுதிகளில் துளையிட்டு 2 மாதங்களில் கச்சேரி சாலையை அடையும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான (26.1 கி.மீ.) 4-வது வழித்தடம் ஒன்றாகும். இந்த வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை உயர்மட்ட பாதையாகவும் அமைக்கப்படுகிறது.

ஃபிளமிங்கோ, கழுகு: இந்த வழித்தடத்தில் 9 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலைங்களும் இடம்பெற உள்ளன. தற்போது, உயர்மட்ட, சுரங்கப்பாதை பணிகள், மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் பல்வேறு இடங்களில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

சுரங்கப்பாதை பணிக்காக, கலங்கரை விளக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரமான `ஃபிளமிக்கோ' கடந்த ஆண்டு செப்.1-ம் தேதி பணியைத் தொடங்கியது. 2-வது சுரங்கம் தோண்டும் இயந்திரமான “கழுகு” தனது பணியை இந்த ஆண்டில் ஜன.18-ம் தேதி தொடங்கியது. இந்த கனரக இயந்திரங்கள், கச்சேரி சாலை, திருமயிலை, பாரதிதாசன் சாலை ஆகிய மெட்ரோ ரயில் நிலையம் வழியாக போட்கிளப்பை அடையவுள்ளது.

இந்நிலையில், கலங்கரை விளக்கத்தில் இருந்து கச்சேரி சாலை நோக்கி சுரங்கப்பாதை பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. முதல்கட்டமாக, கலங்கரை விளக்கம் – கச்சேரி சாலை வரை மொத்தம் 1,260 மீட்டர் சுரங்கம் பாதை அமைக்க வேண்டும்.

தினசரி 8 மீட்டர்: ஃபிளமிங்கோ சுரங்கம் தோண்டும் இயந்திரம் மூலமாக, தற்போது வரை 852 மீட்டர் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. “கழுகு” சுரங்கம் தோண்டும் இயந்திரம் மூலமாக, 732 மீட்டர் வரை சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஃபிளமிங்கோ இயந்திரம், பூமிக்கடியில் கடினமான பகுதிகளை துளையிட்டு வருகிறது.

தினசரி 8 மீட்டர் வரை சுரங்கம் தோண்டப்படுகிறது. இந்த இயந்திரம் மேலும் 2 மாதங்களில் கச்சேரி சாலையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், திருமயிலை மெட்ரோ ரயில் நிலையத்தை அடைவது தாமதமாக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024