தமிழகத்தில் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த இரு நாள்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய உதயநிதி ஸ்டாலின்,
"தமிழகத்தில் அடுத்த இரு நாள்களுக்கு அதி தீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 20 செமீ-க்கும் அதிகமான மழைபெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
பருவமழை பாதிப்புகளில் இருந்து மக்களின் உயிரும், உடைமைகளும் காக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது.
மழைக்காலத்தில் 1913 என்ற அவசர உதவி எண்ணை மக்கள் அழைக்கலாம். கட்டுப்பாட்டு மையத்தில் 150 பேர், 4 ஷிப்டுகளில் பணிபுரிந்து வருகிறார்கள்.
சமூக வலைத்தளங்கள், வாட்ஸ்ஆப் மூலமாக மழை குறித்த தகவல்கள் பகிரப்படும். மேலும் 13,000 தன்னார்வலர்கள் பணிகளில் ஈடுபடுகின்றனர். சென்னையின் அனைத்து வார்டுகளில் நிவாரண மையங்கள் அமைக்கப்படுகின்றன.
இதையும் படிக்க | மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே பாபா சித்திக் இறந்திருக்கலாம்: மருத்துவர்கள்
'தமிழ்நாடு அலெர்ட்'(TN ALERT) என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் இதனைப் பயன்படுத்த வேண்டும்.
மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறாமல் இருந்தால் அதைச் சுற்றி தடுப்பு வேலிகள் அமைக்கப்படும். மழைநீர் வடிகால் ஏதேனும் மூடாமல் இருந்தால் பொதுமக்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக சென்னை மாநகராட்சிக்குத் தகவல் தெரிவிக்கலாம்.
மின்வாரிய ஊழியர்கள், மெட்ரோ நிறுவனம் ஆகியவற்றுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேறு மாவட்டங்களில் இருந்து மின் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
மழை தொடர்பான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள மண்டலவாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.