துமகுரு: கர்நாடக மாநிலம் துமகுரு பகுதியைச் சேர்ந்த 70 வயது நபரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். 27 ஆண்டுகளுக்கு முன்பு, மனைவியை தீவைத்துக் கொன்ற வழக்கில் முதியவர் கைதாகியிருக்கிறார்.
1997ஆம் ஆண்டு, நிங்கப்பா, தனது மனைவியைக் கொலை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு அவர் தலைமறைவாகிவிட்டார்.
காவல்நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரித்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி, நிங்கப்பாவை கைது செய்திருக்கிறார்கள்.
குடும்பச் சண்டையின்போது, நிங்கப்பா, மண்ணெண்ணெயை மனைவி மீது ஊற்றி தீவைத்து எரித்துள்ளார். இதில், அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரண வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதில்,கணவர்தான் தன்னை அடித்துக் கொடுமைப்படுத்தி, உடலில் தீ வைத்ததாகக் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து கொலை வழக்குப் பதிவு செய்து நிங்கப்பா தேடப்பட்டு வந்த நிலையில், அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்ததால் வழக்கு கிடப்பில் போடப்பட்டது.
தற்போது, கிராமத்தில் உள்ள நிங்கப்பாவின் மகன் தொடர்பில் இருப்பதை அறிந்த காவல்துறையினர், அவர் மூலமாக கிராமத்துக்கு வந்த நிங்கப்பாவை கைது செய்துள்ளனர்.