ஒலிம்பிக் பாதுகாப்புக்குச் செல்லும் இந்திய ராணுவத்தின் நாய்கள்!பாரிஸில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் பாதுகாப்புக்கு இந்தியாவின் சிஆர்பிஎஃப் படையிலிருந்து 2 நாய்கள் அனுப்பப்பட்டுள்ளன.இந்தியா சார்பில் பாதுகாப்புக்கு அனுப்பப்பட்டுள்ள 2 நாய்களுடன் வீரர்கள்
மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்) நாய்கள் அணியிலிருந்து இரு நாய்கள் பாரிஸில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் பாதுகாப்புக்காக இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டுள்ளன.
கே 9 என்று அழைக்கப்படும் 2 நாய்களின் அணிகள் ஜூலை 10 அன்று இந்தியாவில் இருந்து பாரிஸுக்கு அனுப்பப்பட்டு கே 9 எனும் 10 அணிகளுடன் இணைந்து ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்பட உள்ளதாகவும், அவற்றுடன் நாய்களைக் கையாள பயிற்சிபெற்ற 3 வீரர்களை அனுப்பியுள்ளதாகவும் சிஆர்பிஎஃப் தெரிவித்துள்ளது.
கே 9 அணிகளின் வாஸ்ட் மற்றும் டென்பி எனப்படும் பெல்ஜியன் ஷெப்பர்ட் மலினோய்ஸ் இனத்தைச் சேர்ந்த 5 மற்றும் 3 வயதுகளையுடைய 2 நாய்களும், சிஆர்பிஎஃப்-ன் நாய் வளர்ப்பு மற்றும் பயிற்சிப் பள்ளியில் நடத்தப்பட்ட கடுமையான சோதனைகளுக்குப் பிறகு இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவதற்கு முன்பு கிட்டத்தட்ட 10 வாரங்கள் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு, நாய்களுக்கு வழங்கப்படக்கூடிய பணிகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நாய்களைக் கையாளுபவர்களுக்கு பிரெஞ்சு மொழியில் அடிப்படை வகுப்புகளும், கடுமையான உடல் பயிற்சியும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகமெங்கும் உள்ள பாதுகாப்புப் படையினரால் விரும்பப்படும் பெல்ஜியன் ஷெப்பர்ட் மலினோய்ஸ் இனத்தைச் சேர்ந்த நாய்கள் பாதுகாப்புப் பணிக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
196 நாடுகளைச் சேர்ந்த தடகள வீரர்கள் பங்கேற்கும் பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024 போட்டிகள் முடியும் வரை அவை பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.