சூனியக்காரரால் பெண்ணின் தலையில் செலுத்தப்பட்ட 77 ஊசிகள்: அகற்றிய மருத்துவர்கள்!

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

சூனியக்காரரால் பெண்ணின் தலையில் செலுத்தப்பட்ட 77 ஊசிகள்: அகற்றிய மருத்துவர்கள்!சூனியக்காரரால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் மண்டை ஓட்டில் இருந்து 77 ஊசிகள் மருத்துவர்களால் அகற்றப்பட்டுள்ளது.ரேஷ்மாவின் தலையை ஸ்கேன் செய்தபோது அதில் தெரிந்த ஊசிகள்

ஒடிசா மாநிலத்தில் சூனியக்காரரால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் மண்டை ஓட்டில் இருந்து 77 ஊசிகள் அகற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவில் பாலங்கீர் நகரிலுள்ள இஷிகான் என்ற கிராமத்தைச் சேர்ந்த ரேஷ்மா பெஹரா (19) என்கிற பெண் தீவிர தலைவலியால் அவதிப்பட்டதால் பீமா பாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரின் தலையை சிடி ஸ்கேன் மூலம் ஆராய்ந்ததில் மண்டை ஓட்டின் உள்ளே பல ஊசிகள் இருப்பது கண்டறியப்பட்டது. 22 ஊசிகள் வரை இருக்குமென்று கணித்த மருத்துவர்கள் அதில் 8 ஊசிகளை எடுத்துள்ளனர். ஆனால், அந்தப் பெண்ணுக்கு வலி மேலும் தீவிரமடைந்ததால் அவரை வீர் சுரேந்திர சாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த வியாழன் (ஜூலை 18) அன்று சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு நடத்தப்பட்ட ஸ்கேன் மற்றும் பரிசோதனைகளைத் தொடர்ந்து, அவரது மண்டை ஓட்டிலிருந்து அறுவை சிகிச்சை மூலம் 70 ஊசிகள் அகற்றப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து நேற்று (ஜூலை 20) நரம்பியல் நிபுணர்களால் மீண்டும் நடந்தப்பட்ட அறுவை சிகிச்சையில் மேலும் 7 ஊசிகள் அகற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்துப் பேசிய அந்த மருத்துவமனையின் இயக்குநர் பாபாகிரஹி ராத், “இதுவரை 77 ஊசிகளை அந்தப் பெண்ணின் மண்டை ஓட்டிலிருந்து இரு அறுவை சிகிச்சைகள் மூலம் அகற்றியுள்ளோம். அதிர்ஷ்டவசமாக, ஊசிகள் அவரது மண்டை ஓட்டில் தீவிர காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், தலையில் உள்ள மென் திசுக்களில் சிறிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண் இப்போது மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார். அவர் சூனியம் செய்பவரிடம் என்ன பிரச்னைகளுக்காகச் சென்றார் என்பதையும் விசாரித்து வருகிறோம். உளவியல் ரீதியான பிரச்னை இருக்குமென்று தெரிகிறது. மேலும், பரிசோதனைகள் செய்த பிறகு அடுத்தக்கட்ட சிகிச்சைகள் அவருக்கு வழங்கப்படும்” என்று கூறினார்.

இந்த நிலையில், சூனியம் செய்வதாகக் கூறி ரேஷ்மாவின் தலையில் ஊசிகளை செலுத்திய நபரான தேஜ்ராஜ் ராணாவை போலீஸார் கைது செய்துள்ளனர். 4 ஆண்டுகளுக்கு முன்பு ரேஷ்மாவின் தாயார் இறந்த பிறகு, அவர் அடிக்கடி நோய்வாய்பட்டுள்ளார். ஆனால், எந்த சிகிச்சையும் பலனளிக்காமல் போயுள்ளது.

அதன் காரணமாக கடந்த 2021-ல் ரேஷ்மாவின் குடும்பத்தினர் சூனியக்காரரான ராணாவின் உதவியை நாடியுள்ளனர். சிகிச்சை செய்வதாகக் கூறி ரேஷ்மாவை ஒரு அறைக்குள் ராணா அழைத்துச் சென்றதாக அவரது குடும்பத்தினர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக அடிக்கடி தீவிர தலைவலி ஏற்படுவதாக ரேஷ்மா கூறியதால் இந்தப் பிரச்னை தங்களுக்குத் தெரிய வந்ததாக குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024