சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் சில்மிஷம் – வாலிபர் கைது

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

சேலம்,

சேலம் அம்மாப்பேட்டை கிருஷ்ணன் புதூர் பகுதியில் 36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், அங்குள்ள விசைத்தறி பட்டறைக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். கடந்த 15-ந் தேதி அந்த பெண் வேலைக்கு சென்றுவிட்டு மதியம் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வாலிபர் ஒருவர் பின் தொடர்ந்து வந்து திடீரென கட்டிப்பிடித்து கீழே தள்ளி தகாத முறையில் ஈடுபட முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், சத்தம் போட்டு கூச்சலிட்டார்.

இதைக்கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்து அந்த பெண்ணை மீட்டனர். அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். இந்த காட்சிகள் அங்குள்ள ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவானது. தற்போது இந்த வீடியோ வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண், வீராணம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவர் மன்னார்பாளையம் பிரிவு பகுதியை சேர்ந்த கண்ணன் (வயது 27) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். கஞ்சா போதையில் கண்ணன், சாலையில் நடந்து சென்ற பெண்ணை நோட்டமிட்டு வந்து அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024