அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாட்டு வாத்தியார் கைது செய்யப்பட்டார்.
கோவை,
கோவை மாவட்டம் நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன்(வயது 53). இவர் காரமடை பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் பாட்டு வாத்தியாராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் பத்மநாபன், பள்ளியில் படித்து வந்த 8 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அறிந்த மாணவிகளின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து பள்ளியின் தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்டோருக்கு புகார் அளித்தனர். இதையடுத்து அவர்கள் கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் முருகானந்திக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில் அவர் விசாரணை மேற்கொண்டார்.
அதில் பாட்டு வாத்தியாரான பத்மநாபன், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய ஆய்வாளர்(பொறுப்பு) சித்ரா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து பத்மநாபனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
அரசு பள்ளி மாணவிகளுக்கு, பாட்டு வாத்தியார் பாலியல் தொல்லை கொடுத்து கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.