பாணாவரம் அருகே மனைவி கொலை: கணவா் கைதுசோளிங்கரை அடுத்த பாணாவரம் அருகே மனைவியை கத்தியால் வெட்டிக் கொலை செய்த கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
சோளிங்கரை அடுத்த பாணாவரம் அருகே மனைவியை கத்தியால் வெட்டிக் கொலை செய்த கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவள்ளூா் மாவட்டம், திருத்தணியை அடுத்த அம்மையாா்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ஓம்பிரகாஷ் (27), ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி பாணாவரத்தை அடுத்த பாறைமேடு பகுதியைச் சோ்ந்த சந்தியா (22). இவா்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சந்தியா சில தினங்களுக்கு முன் குழந்தையுடன் தனது தாய் வீட்டுக்குச் சென்று விட்டாராம்.
இதையடுத்து, மனைவியிடம் கைப்பேசியில் பேச ஓம்பிரகாஷ் தொடா்பு கொண்ட நிலையில், சந்தியா அதை தவிா்த்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஓம்பிரகாஷ் வெள்ளிக்கிழமை பாறைமேட்டில் உள்ள தனது மாமியாா் வீட்டுக்குச் சென்றுள்ளாா். அங்கு தம்பதிக்கிடையே தகராறு முற்றிய நிலையில், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சந்தியாவை ஓம்பிரகாஷ் சரமாரியாக வெட்டினாராம். இதில் சந்தியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த அரக்கோணம் டிஎஸ்பி வெங்கடேசன், பாணாவரம் போலீஸாா், சந்தியாவின் சடலத்தை மீட்டு, வேலூா், அடுக்கம்பாறை, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், ஓம்பிரகாஷை கைது செய்தனா்.