தங்லான் படப்பிடிப்பில் எருமை மாட்டை நிறுத்தி அதில் ஏறும்படி சொன்னார்கள் என்று மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழில் ரஜினிகாந்தின் 'பேட்ட', விஜய்யின் 'மாஸ்டர்', தனுசுடன் 'மாறன்' படங்களில் நடித்துள்ள மாளவிகா மோகனன், தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரமுடன் 'தங்கலான்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
கோலார் தங்க வயலில் பணியாற்றிய தமிழர்கள் பட்ட கஷ்டங்களை இதில் காட்சிப்படுத்தி உள்ளனர். படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் மாளவிகா மோகனன் மேக்கப் போட்டு ஆளே அடையாளம் தெரியாமல் இருந்தார். வில்லன்களோடு ஆவேசமாக அவர் சண்டை போடும் காட்சியும் இருந்தது.
இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து மாளவிகா மோகனன் கூறும்போது, ''தங்கலான் படத்தில் நடிக்க தினமும் ஐந்து மணிநேரம் மேக்கப் போட்டேன். ஒவ்வொரு நாளும் பத்து மணிநேரம் கெமிக்கலோடு கூடிய மேக்கப் உடலோடு ஒட்டி இருந்தது.
இதனால் எனக்கு அலர்ஜி ஏற்பட்டது. சரும பாதிப்பும் ஏற்பட்டது. சரும மருத்துவர், கண் மருத்துவர் உள்பட ஐந்து டாக்டர்களை சந்தித்து மருத்துவ ஆலோசனைகள் பெற்றேன்.
ஒரு நாள் படப்பிடிப்பு அரங்கில் ஒரு எருமை மாட்டை நிறுத்தி அதில் ஏறி உட்காரும்படி சொன்னார்கள். அப்படி ஒரு காட்சி இருப்பதை இயக்குனர் முன்கூட்டி சொல்லவில்லை. பயந்து கொண்டே அதில் ஏறினேன். அந்த காட்சியும் படத்தில் உள்ளது'' என்றார்.