Friday, September 20, 2024

வெனிசூலாவில் அரசியல் மாற்றம் ஏற்படுமா..? விறுவிறுப்பான வாக்குப்பதிவு

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

காரகஸ்:

வெனிசூலா நாட்டில் அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் நிகோலஸ் மதுரோ மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் எட்மண்டோ கான்சலஸ் களமிறங்கி உள்ளார். இவர்களுக்கிடையே நேரடி போட்டி நிலவுகிறது. இவர்கள் தவிர மேலும் 8 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 1.7 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இந்த தேர்தலில் அதிபர் பதவிக்கு நிக்கோலஸ் மதுரோ மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் சரி, அல்லது அவரது முக்கிய போட்டியாளரான எட்மண்டோ கான்சலசாக இருந்தாலும் சரி, இந்தத் தேர்தல் அமெரிக்காவில் தாக்கத்தை ஏற்படுத்தும். அரசாங்க எதிர்ப்பாளர்களும் ஆதரவாளர்களும் ஒரே மாதிரியாக மதுரோ மீண்டும் வெற்றி பெற்றால், வாய்ப்புகளுக்காக நாட்டை விட்டு வெளியேறிய 7.7 மில்லியன் வெனிசுலா மக்களுடன் சேர உள்ளதாக கூறியிருக்கிறார்கள்.

ஹ்யூகோ சாவேஸ் அதிபராக இருந்தபோது வெனிசூலாவில் சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி தொடங்கியது. அவரைத் தொடர்ந்து அவரது வாரிசான நிக்கோலஸ் மதுரோவின் ஆட்சிக்காலத்திலும் நிலைமை மோசமடைந்தது. மக்கள் வாய்ப்பு தேடி வெளிநாடுகளுக்கு கூட்டம் கூட்டமாக வெளியேறினர். இந்த நிலைமை வெனிசுலாவின் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியாக பார்க்கப்படுகிறது.

வெனிசூலாவில் இருந்து கடந்த 11 ஆண்டுகளாக இடம்பெயர்ந்த பெரும்பாலான மக்கள் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் குடியேறினர். சமீபத்திய ஆண்டுகளில் பலர் அமெரிக்காவுக்கு செல்லத் தொடங்கினர்.

இந்த விவகாரம் தேர்தல் பிரசாரத்தில் கடுமையாக எதிரொலித்தது. பொருளாதார நெருக்கடி, மக்கள் வெளியேற்றம் ஆகிய முக்கிய பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சி வேட்பாளர் கான்சலஸ் பிரசாரம் மேற்கொண்டார்.

வெளிநாடுகளில் வசிக்கும் வெனிசூலா மக்கள் தாயகம் திரும்பவும் அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் ஒன்றிணைக்கவும் போதுமான வேலைகள் உருவாக்கப்படும் என இரண்டு வேட்பாளர்களும் வாக்குறுதி அளித்துள்ளனர்.

மதுரோ தனது இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது அமெரிக்காவை பற்றி கூறினார். "அவர்கள் நமது மக்களை அடிபணியச் செய்ய முயன்றனர்" என்று கூறிய அவர், இப்போது வெற்றிக்காக நிமிர்ந்து நிற்பதாக கூறினார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று நடைபெறும் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. வெனிசூலா அரசியலில் மாற்றம் வருமா? அல்லது மதுரோ ஆட்சியில் நீடிப்பாரா? என்ற கேள்விக்கு இந்த தேர்தல் மூலம் விடை கிடைக்கும்.

செய்திகளை எக்ஸ் தளத்தில் அறிந்துகொள்ள… https://x.com/dinathanthi

You may also like

© RajTamil Network – 2024