Monday, September 23, 2024

நடத்தையில் சந்தேகம்: காதல் மனைவியை அயன்பாக்சால் சூடு வைத்து கொடுமைப்படுத்திய தொழிலாளி

by rajtamil
0 comment 19 views
A+A-
Reset

நாசியாவின் முகம், கை, கால் உள்பட பல இடங்களில் சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளார்.

சென்னை,

சென்னை புரசைவாக்கம் குழந்தைவேலு தெருவை சேர்ந்தவர் காலிக் (வயது 32). கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி நாசியா (32). இவர்கள் 2 பேரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. இதற்கிடையே நாசியாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை காலிக் கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது.

இதனால் காலிக்கை விவாகரத்து செய்யும் மனநிலையில் நாசியா இருந்துள்ளார். இந்த நிலையில் அவர்கள் 2 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் நாசியா தூங்க சென்றுள்ளார். அவர் அயர்ந்து தூங்கியதும் காலிக் வீட்டில் இருந்த அயன்பாக்சை நன்கு சூடாக்கி நாசியாவின் முகம், கை, கால் உள்பட பல இடங்களில் சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளார்.

வலி தாங்க முடியாமல் நாசியா கதறி உள்ளார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் வந்தனர். பலத்த தீக்காயம் அடைந்த நாசியாவை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து காலிக்கை கைது செய்தனர்.

You may also like

© RajTamil Network – 2024