முக்கொம்பு வந்தது காவிரி நீர்: பூக்கள், நெல்மணிகளை தூவி வரவேற்ற விவசாயிகள்
திருச்சி: காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று மாலை திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது. அப்போது, விவசாயிகள் பூக்கள், நெல்மணிகளை தூவி காவிரி நீரை வரவேற்றனர்.
கர்நாடக அணைகள் நிரம்பி, உபரி நீர் முழுவதும் காவிரியில் திறக்கப்பட்டு வருவதால், மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை நேற்று எட்டியது. மேலும், அணைக்கு அதிக அளவில்தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூலை 28-ம் தேதி விநாடிக்கு 12 ஆயிரம்கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக இருந்ததால் நேற்று முன்தினம் தண்ணீர் திறப்பு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
இந்த தண்ணீர் அகண்ட காவிரி வழியாக திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணைக்கு நேற்று மாலை வந்தது. நுங்கும், நுரையுமாக ஆர்ப்பரித்து வந்த தண்ணீரில் விவசாயிகள் பூக்கள், நெல்மணிகளை தூவி காவிரி நீரை வரவேற்றனர்.
இந்த நிகழ்வில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் அயிலை சிவசூரியன், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் நலச் சங்க நிர்வாகி தீட்சிதர் பாலு, தமாகா விவசாயப் பிரிவு நிர்வாகி கொத்தட்டை ராஜேந்திரன் மற்றும் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
வழக்கமாக, டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12-ம்தேதி திறக்கப்படும். இந்த ஆண்டுஅணையில் போதுமான அளவுக்கு தண்ணீர் இல்லாததால், அணை திறக்கப்படவில்லை.
இந்நிலையில், கர்நாடக அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால் உபரிநீர் திறக்கப்பட்டு, மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.
இன்று தண்ணீர் திறப்பு: மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று இரவு கல்லணையை அடைந்தது. கல்லணையிலிருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு மற்றும்கல்லணைக் கால்வாய் ஆகியவற்றில் இன்று தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் பங்கேற்று, கல்லணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்க உள்ளனர்.