காஞ்சிபுரத்தில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம் காஞ்சிபுரத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.
காஞ்சிபுரம், ஜூலை 31: காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில், காட்டுப் பன்றிகளை ஒழிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்டக் குழு சாா்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே காவலான் கேட் பகுதியில் சங்கத்தின் வட்டாரச் செயலா் என்.நந்தகோபால் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க மாவட்ட செயலா் கே.நேரு, துணைச் செயலா் எஸ்.ஆனந்த், மாவட்ட பொருளாளா் கே.செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விளை நிலங்களை அதிகமாக சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை ஒழிக்க வாய்வெடி மருந்தைப் பயன்படுத்த அனுமதி கோருதல், காட்டுப் பன்றிகளால் ஏற்படும் பயிா் சேதத்துக்குரிய இழப்பீட்டை வழங்க வலியுறுத்தல், 60 வயதைக் கடந்த அனைத்து விவசாயிகளுக்கும் ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.