Friday, September 20, 2024

திரையுலகைக் காக்க தமிழ்நாடு உள்ளாட்சி கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

by rajtamil
0 comment 21 views
A+A-
Reset

திரையுலகைக் காக்க தமிழ்நாடு உள்ளாட்சி கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கேளிக்கை வரியை குறைப்பது அல்லது முழுமையாக ரத்து செய்வதன் மூலம் கட்டணத்தை குறைத்து திரையரங்குகளுக்கு அதிக பார்வையாளர்களை வரவழைக்க முடியும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக திகழும் திரைத்துறை, வெளியிலிருந்து பார்ப்பதற்கு ஜொலிப்பது போல தோன்றினாலும், உள்ளுக்குள் இருளாகவே காட்சியளிக்கிறது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கும், நடிகர் சங்கத்திற்கும் இடையே ஏற்பட்டிருக்கும் கருத்து மோதல்களால் திரைத்துறையே முடங்கும் நிலை உருவாகியுள்ளது.

நடிகர்களின் அதிக ஊதியம், உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் 16-ந்தேதிக்குப் பிறகு புதிய திரைப்படங்களை தொடங்குவதில்லை என்றும், நவம்பர் 1-ந்தேதி முதல் எந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பையும் நடத்துவதில்லை என்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. திரைத்துறையில் ஏற்பட்டிருக்கும் இந்த மோதல் அதன் வளர்ச்சிக்கு வழிவகுக்காது.

2024-ம் ஆண்டின் முதல் 7 மாதங்களில் 125-க்கும் கூடுதலான திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் 4 திரைப்படங்கள் மட்டும்தான் தயாரிப்பாளர்களுக்கு லாபம் ஈட்டிக் கொடுத்துள்ளன. மீதமுள்ள 120 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் பெரும் இழப்பையே சந்தித்துள்ளன. அந்த வகையில் திரைத்துறையினருக்கு ஏற்பட்ட இழப்பு மட்டும் ரூ.700 கோடிக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது. இதை நிச்சயமாக தாங்க முடியாது.

ஒரு பெரிய திரைப்படத்தை தயாரிப்பதற்கு ஆகும் செலவில் கிட்டத்தட்ட 70% நாயகனின் ஊதியத்திற்கு செலவாகிறது. பிற நடிகர்களின் ஊதியம், தயாரிப்புச் செலவு ஆகியவை போக தொழிலாளர்களுக்கான ஊதியமாக வெறும் 5%க்கும் குறைவான தொகை மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மிகப்பெரிய பொருள் செலவில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் தோல்வியடையும் நிலையில், அதன் தயாரிப்பாளர்களுக்கு மீண்டு எழ முடியாத அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. தமிழ்த் திரையுலகில் காலம் காலமாக கோலோச்சி வந்த ஏராளமான நிறுவனங்கள் இப்போது படத்தயாரிப்பிலிருந்து விலகி விட்டன என்பதே இதற்கு சிறந்த சான்று ஆகும்.

பெரிய நட்சத்திரங்கள் நடித்து, பெரிய பட்ஜெட் படம் வெளியாகும் போது 70 முதல் 80 விழுக்காடு திரையரங்குகள் அந்த ஒரு படத்திற்கே ஒதுக்கப்படுகின்றன. இதனால் அதே தேதியில் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியாவதற்கு வாய்ப்பே இல்லாமல் போகிறது. இதனால் குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் வெளியாவதற்கு முன்பாகவே இழப்பை சந்திக்கின்றன, தயாரிப்பாளர்களை கடனாளி ஆக்குகின்றன.

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் திரையரங்குகள் கிடைக்காமல் முடங்கிக் கிடக்கும் திரைப்படங்களின் எண்ணிக்கை மட்டும் 1500-க்கும் அதிகம் ஆகும். அந்தத் திரைப்படங்களை தயாரித்த வகையில் முடங்கிக் கிடக்கும் தொகை ரூ.4,000 கோடிக்கும் அதிகம் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்த் திரையுலகின் அவல நிலை குறித்தும், அதைப் போக்க மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள், உருவாக்க வேண்டிய விதிமுறைகள் ஆகியவற்றை வலியுறுத்தியும் 08.02.2020 ஆம் நாள் அன்றைய முதல்-அமைச்சருக்கும், செய்தி விளம்பரத்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியிருந்தேன்.

ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், ஐந்தாண்டுகள் கழித்து அதே நிலைதான் மீண்டும் ஏற்பட்டிருக்கிறது. அப்போது நான் வலியுறுத்தியவாறே புதிய விதிமுறைகள் வரையறுக்கப்பட வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் இப்போது வலியுறுத்தியுள்ளது. இதை அரசு கவனிக்க வேண்டும்.

திரைத்துறையை பாதுகாக்க முதல் நடவடிக்கையாக நாயகர்களின் ஊதியம் கணிசமாக குறைக்கப்பட வேண்டும். தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்க நிர்வாகிகளைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு இதற்கு தீர்வு காணப்படவேண்டும். திரையரங்குகளில் திரைப்படங்களின் வெளியீடுகள் முறைப்படுத்தப்பட வேண்டும்.

பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியாகும் போது, ஒரு படத்திற்கு அதிக அளவாக 250 திரையரங்குகள் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.அதேபோல், மக்களை திரையரங்குகளுக்கு வரவழைக்கும் வகையில், நுழைவுச்சீட்டு கட்டணத்தையும், பிற கட்டணங்களையும் குறைக்க வேண்டும்.

திரைத்துறையைக் காப்பாற்ற அரசும் அதன் பங்களிப்பைச் செய்ய வேண்டும். திரையரங்குகளின் நுழைவுக் கட்டணம் மீது 12% முதல் 18% வரை ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, தமிழ்நாடு உள்ளாட்சி கேளிக்கை வரியாக 8% வசூலிக்கப்படுகிறது. இதனால், திரையரங்குகளுக்கான நுழைவுக்கட்டணம் சாதாரணமானவர்களால் செலுத்த முடியாத அளவுக்கு உச்சத்தை அடைந்துள்ளது.

கேளிக்கை வரியை குறைப்பது அல்லது முழுமையாக ரத்து செய்வதன் மூலம் கட்டணத்தைக் குறைத்து திரையரங்குகளுக்கு அதிக பார்வையாளர்களை வரவழைக்க முடியும். எனவே, திரையுலகைக் காக்க தமிழ்நாடு உள்ளாட்சி கேளிக்கை வரியை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்."

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024