இந்தியர்கள் யாரும் வங்கதேசம் செல்ல வேண்டாம் – மத்திய அரசு அறிவுறுத்தல்!
வங்கதேச கலவரம்
வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாகப் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், இந்தியர்கள் யாரும் தற்போதைக்கு வங்கதேசம் செல்ல வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு பிரச்னை தொடர்பாக அரசு ஆதரவாளர்களுக்கும் – போராட்டக்காரர்களுக்கும் இடையே மீண்டும் ஏற்பட்ட கலவரத்தில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
வங்கதேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது எனவும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வலியுறுத்தியும் மாணவர்கள் போராட்டம் கடந்த மாதம் நடந்தபோது வன்முறை வெடித்தது.
விளம்பரம்
இதனைதொடர்ந்து 30 சதவீத இட ஒதுக்கீட்டை, 25 சதவீதமாக அந்நாட்டு உச்சநீதிமன்றம் குறைத்து உத்தரவிட்டது. இந்தநிலையில் தலைநகர் டாக்காவில் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர்.இந்தப் போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. போராட்டங்கள் கையை மீறிச் சென்ற நிலையில், நிலைமையைச் சமாளிக்க ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மறு அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள் யாரும் வங்கதேசம் செல்ல வேண்டாம் எனவும் ஏற்கெனவே வங்கதேசத்தில் இருப்போர் அதீத எச்சரிக்கையுடன் இருக்கவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தேவையில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- Telegram
- Follow us onFollow us on google news
.Tags:
Bangladesh