யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்த கோரிய மனு: மத்திய அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்த உரிய நடைமுறைகளை வகுக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்த உரிய நடைமுறைகளை வகுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி சென்னையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர், "யூடியூப் சேனல்கள் எந்த வரைமுறையும் இல்லாமல் வதந்திகளையும், உண்மைத் தன்மையற்ற தகவல்களையும் பரப்பி வருகின்றன.

ஊடக விசாரணை என்ற பெயரில் காவல் துறையினரின் புலன் விசாரணைக்கு பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. இதனால் உண்மை குற்றவாளிகளை கண்டறிவதிலும், விசாரணையை சரியான பாதையில் கொண்டு செல்வதிலும் சிரமம் ஏற்படுகிறது. யூடியூப் சேனல்களின் பதிவுகளை முறைப்படுத்த எந்த நடைமுறையும் இல்லாததால் பொது அமைதி பாதிக்கப்படுகிறது. எனவே, யூடியூப் சேனல்களை முறைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் உரிய நடைமுறைகளை வகுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

You may also like

© RajTamil Network – 2024