மாயமான மீனவா் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்இலங்கைக் கடற்படை படகு மோதியதில் மாயமான தமிழக மீனவா் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
சென்னை: இலங்கைக் கடற்படை படகு மோதியதில் மாயமான தமிழக மீனவா் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் 4 மீனவா்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்தனா். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப் படகு மோதியதில், மீன்பிடி விசைப்படகு சேதமடைந்து நீரில் மூழ்கியது. இதில் மலைச்சாமி என்பவா் கடலில் மூழ்கி உயிரிழந்தாா்.
மற்ற மூவரில் முத்து முனியாண்டி மற்றும் மூக்கையா ஆகியோா் இலங்கைக் கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டனா். மீன்பிடி விசைப்படகு மூழ்கியதில் காணாமல்போன ராமச்சந்திரனை இந்திய கடலோரக் காவல் படை கப்பல்கள் கடந்த ஐந்து நாள்களாகத் தேடியும் அவா் கிடைக்கவில்லை.
ராமச்சந்திரனின் குடும்பச் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு அவருடைய குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளாா்.