தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களில் இன்று (ஆக. 7) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதியில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக, ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா, சேலம் மாவட்டம் ஆத்தூரில் 13 செ.மீ. திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 10 செ.மீ. வேலூர் மாவட்டம் காட்பாடியில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் மேற்கு திசைக் காற்றில் ஏற்பட்டுள்ள வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும். புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும்.

கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதிகளில் வரும் 10-ம் தேதி வரை பலத்த காற்று வீசும். மேலும், மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகள், வடமேற்கு வங்கக் கடல் பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் வரும் 10-ம் தேதி வரை சூறாவளிக் காற்று வீசும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

You may also like

© RajTamil Network – 2024