Saturday, September 21, 2024

இலங்கைக்கு எதிரான தொடரை இழந்த பின் இந்திய அணியின் கேப்டன் ரோகித் கூறியது என்ன..?

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 0-2 என்ற கணக்கில் இந்தியா இழந்தது.

கொழும்பு,

இந்தியா – இலங்கை இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.

இதில் நேற்று நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அவிஷ்கா பெர்னண்டோ 96 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் அதிகபட்சமாக ரியான் பராக் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் இந்த முறையும் இலங்கை சுழற்பந்து வீச்சில் சிக்கினர். தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன சுப்மன் கில் 6 ரன்களிலும், கேப்டன் ரோகித் சர்மா 35 ரன்களிலும் (20 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலியும் 20 ரன்களில் வீழ்ந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

வெறும் 26.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இந்திய அணி 138 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லாலகே 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்த தொடரில் ஏற்பட்ட தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், "இந்த தொடரில் ஸ்பின்னர்களுக்கு எதிராக எங்களது பேட்ஸ்மேன்கள் சிரமத்தை சந்தித்தார்கள் என்று தோன்றவில்லை. ஆனாலும் ஒவ்வொருவரும் தங்களது ஆட்ட திட்டங்களில் கவனத்தை செலுத்த வேண்டும். இந்தியாவுக்காக விளையாடும்போது எப்போதுமே மன நிறைவு அடையாது. அதிலும் கேப்டனாக அதற்கு வாய்ப்பே இல்லை. சிறப்பாக விளையாடிய இலங்கை வீரர்களை பாராட்டியே ஆக வேண்டும். எங்களை விட இந்த தொடரில் இலங்கை வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

நாங்கள் சூழலுக்கு ஏற்றவாறு காம்பினேஷனை பயன்படுத்தினோம். அதனால் சில வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டும், வாய்ப்பு மறுக்கப்பட்டும் இருந்தது. இருந்தாலும் நாங்கள் இன்னும் நிறைய முன்னேற வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. இந்த தொடரின் மூலம் சில விஷயங்களை நாங்கள் கற்றுக் கொண்டோம். இந்த தொடரில் ஏற்பட்ட தோல்வியால் உலகமே முடிந்து விடாது. இதுபோன்ற தோல்விகள் அவ்வப்போது வரும் ஆனால் அதிலிருந்து நாம் எப்படி கம்பேக் கொடுக்கிறோம் என்பதே முக்கியம்" என்று கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024