உலக அளவில் மின்னொளியில் ஜொலிக்கும் நகரங்களில் முதல் இடம் பிடித்த துபாய்

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

உலக அளவில் மின்னொளியில் ஜொலிக்கும் நகரங்களில் முதல் இடத்தை துபாய் பிடித்தது. மேலும் ஓமன் தலைநகர் மஸ்கட் 3-வது இடத்தை பிடித்தது.

துபாய்,

சுற்றுலா தொடர்பான சர்வதேச ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

துபாய் உலகில் மிகவும் முக்கியமான வணிக நகரமாக மட்டுமல்லாமல், சுற்றுலா நகரமாகவும் திகழ்கிறது. மேலும் பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் தங்களது அலுவலகங்களை இங்கு அமைத்துள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள் சுற்றுலாவுக்காக துபாய்க்கு வருகின்றனர். சமீபத்தில் துபாய் சர்வதேச விமான நிலையம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் உலகின் மிகவும் உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலீபாவை பார்வையிட வருகிறார்கள். மேலும் துபாய் நகரத்தின் பல்வேறு பகுதிகள் இரவு நேரங்களில் மின்னொளியில் ஜொலிக்கிறது. துபாய் ஜபீல் பூங்காவில் உள்ள 'துபாய் கார்டன் கிலோவ்' என்ற மின்னும் தோட்டம் இரவு நேரத்தில் செயல்படுகிறது.

இங்கு உள்ள வெளிச்சம் வானில் செல்லும் விமான பயணிகள் துபாய் நகரத்தின் பிரமாண்ட அழகை தெரிந்து கொள்ள உதவுகிறது. இதுமட்டுமல்லாமல் நகரின் முக்கிய சாலைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களும் வண்ண விளக்குகளால் பிரகாசமாக ஜொலிக்கிறது. இதனால் உலகில் இரவு நேரங்களில் மின்னொளியில் ஜொலிக்கும் நகரங்களில் முதல் நகரமாக துபாய் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து 2-வது இடத்தில் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரமும், 3-வது இடத்தில் ஓமன் நாட்டின் மஸ்கட் நகரமும் இடம் பெற்றுள்ளது. மஸ்கட்டில் உள்ள முத்ரா சூக் பகுதி வண்ண விளக்குகளால் சூழப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024