Friday, September 20, 2024

பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில்தான் உள்ளோம் – சந்திரபாபு நாயுடு

by rajtamil
0 comment 19 views
A+A-
Reset

அமராவதி,

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் பா.ஜ.க. 240 தொகுதிகளை கைப்பற்றியது.

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பீகார் முதல்-மந்திரி தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம், முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான மதசார்பற்ற ஜனதாதளம், மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், சிரங் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி போன்ற கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மத்தியில் ஆட்சியமைக்க 272 தொகுதிகளை கைப்பற்றவேண்டிய நிலையில் பாஜக கூட்டணி 292 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதில் கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம் 16 தொகுதிகளையும், ஐக்கிய ஜனதாதளம் 12 தொகுதிகளையும் கைப்பற்றின.

அதேவேளை, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

மத்தியில் ஆட்சியமைக்க சந்திரபாபு மற்றும் நிதிஷ் குமார் கட்சிகளின் ஆதரவு தேவை என்பதால் இரு கட்சிகளையும் தங்கள் பக்கம் கொண்டுவர இந்தியா கூட்டணி முயற்சிக்கலாம் என தகவல் வெளியானது.

இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் உள்ளது என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இன்று டெல்லி செல்ல உள்ளதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இதன் மூலம் மத்தியில் மீண்டும் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி அமையலாம் என்பது உறுதியாகியுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024