புழல் சிறையில் பெண் சிறைவாசிகளுக்கு செயற்கை நகை தயாரிப்பு பயிற்சி: விஐடி போபால் சிறப்பு ஏற்பாடு
சென்னை: விஐடி போபால் சார்பில் சென்னை புழல் சிறையில் பெண் சிறைவாசிகளுக்கு செயற்கை நகை தயாரிப்பு குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. வேலூர் விஐடி பல்கலைக்கழகம் சார்பில் சமூக நலன் தொடர்பான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், விஐடி வேந்தர் கோ.விஸ்வநாதனின் வழிகாட்டுதலின் பேரில் சென்னை புழல் பெண்கள் சிறையில் உள்ள பெண் சிறைவாசிகளுக்கு விஐடி போபால் சார்பில் செயற்கை நகை தயாரிப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
50க்கும் மேற்பட்டோர் பயன்: இந்த முகாமை விஐடி உதவிதுணை தலைவர் காதம்பரி விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். இதில் 50க்கும் மேற்பட்ட பெண் சிறைவாசிகள் ஆர்வத்தோடு கலந்துகொண்டனர். அவர்களுக்கு களிமண், காகிதம், பட்டு, நூல், பாசி ஆகியவற்றால் நகைகள் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த பயிற்சியின் வாயிலாக பெண் சிறைவாசிகள் தொழில்முனைவோர் ஆகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.